Tuesday, September 18, 2012

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்

-மலையருவி


மலையருவி - நா.இளங்கோ

சாலையின் விளிம்பில்
சாக்கடையோரத்தில் படுத்திருக்கும்
நாயாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
என் கவலைகள்

எப்பொழுதாவது கிடைக்கும்
எச்சில் சோறும்
எலும்புத் துண்டுமான
சில ஆறுதல் மொழிகளும்
இல்லாமல்
ஒட்டிய வயிற்றொடு
கொலைப் பட்டினியாய்..

வீசப்பட்ட
எச்சில் இலைகளுக்கும்
சொந்தம் கொண்டாடும்
அன்னக்காவடிகளாய்
வார்த்தைகள்,
இலைவழித்த கையோடு
மிரட்டும்

தொலைவில் எங்கோ கேட்கும்
சக நாய்களின்
குரைப்பொலி கேட்டுத்
திடுக்கிட்டு விழித்து
பசி மயக்கிலும்
குரலெடுத்துக் குரைத்துத்
தோழமை காட்டும்
என் கவலைகள்