Tuesday, August 7, 2012

புத்தகக் காட்டில் என்னைத் தொலைத்தேன்..

-மலையருவி


கவிஞர் மலையருவி

பிறர் முகமறியா
புத்தகக் காட்டில்
விரல் பிடிப்பார்
யாருமின்றி
நடைப்போட்ட பொழுதுகளில்
தொலைந்து போவேன்
என அறியேன்

சொற்களும் தொடர்களும்
நெடுமரங்களாய்
நீள்கொடிகளாய்ப்
புதர்களாய்ச் செறிந்து
அந்தகாரமாய் இருண்ட
அடர் வனத்தில்
நான்
வாசிக்கும் வேட்கையில்
அலைந்து திரிகையில்
சூரியனின்
கடக மகரப் பயணங்களைக்
கணக்கிடவே இல்லை

இடையிடையே
இசைபாடும்
இலக்கியக் குயில்கள்
என்னை ஆசுவாசப்படுத்தின
கவிதைகள்
பட்டாம்பூச்சிகளாய்
மின்னிச் சிறகடித்து
மயக்கின

இசங்களுக்கு
இரையாவது அஞ்சி
நடுங்கிக் கரந்து
நோட்டமிடுகையில்
அவற்றின் ஆற்றல் கண்டு
அடங்கி ஒடுங்கினேன்

தொடரும் விண்மீன்களால்
திசையறிய
வான்நோக்கி
விழிக்கையில்
புத்தகங்கள் அன்றி
வெளி ஒன்றும் காணேன்

திக்குகள் கரைந்து
விண்ணும் மண்ணும்
என்னுள் சங்கமிக்க
நூல்களில் நுழைந்து
வாசகங்களின்
அகத்தும் புறத்தும்
அலைந்து திரிந்ததில்
என்னைத் தொலைத்தேன்.